Tuesday, July 26, 2011

மறக்காத கருப்பு ஆடி.


அவலமும் அவலத்துள் எதிர்ப்பும் இவ்வகையான கணங்களில் உரை நடை தோற்றுப்போகின்றது.ஆனால் கவிதை அந்தக் கணங்களை மீட்டுத்தருகிறது.பாஸில் ஃபெர்னாண்டோ (Basil Fernando) என்னும் சிங்கள வழக்கறிஞர் ஜூலைப் படுகொலைகளின் பல முகங்களைக் கவிதையில் காட்டியிருக்கிறார்.அவருடைய "தார்மீக சமூகம்" என்கிற கவிதை கொலையாளிகள்மீதும் எனதும் அவரதும் சமூகத்தின் மீதுமான பெருங்குற்றச்சாட்டாகும்.

அந்தக் கவிதையைத் தொடர்ந்து அவரெழுதிய மற்றுமொரு கவிதைதான் "ஜூலை 83:மேலும் ஒரு சம்பவம்".இது இன்னுமொரு பெருங்குற்றச்சாட்டு.கவிதையில் வருகிற "மேலும்ஒரு" என்ற தொடர் எழுப்புகிற முரண்நகை மிகுந்த பலம் வாய்ந்தது.அதன் நோக்கமே இத்தகைய முரண்நகையைக் கிளப்புவதுதான்.எனினும் வேறொரு தலைப்பையும் ஒருவர் எண்ணிப் பார்க்க முடியும்.அவலத்துள் எதிர்ப்பு அந்தக் கிழமை இடம்பெற்ற ஒரு சம்பவம் பற்றிய பாஸில் ஃபெர்னாண்டோவின் கவித்துவ விவரணம் அந்த வாரம் கொல்லப்பட்ட அத்தனை தமிழர்களதும் அவலத்தையும் வலியையும் ஒரு சேர எழுப்புகிறது.அது மட்டுமன்று பாஸில் ஃபெர்னாண்டோவின் கவிதை சுமத்துகிற குற்றச்சாட்டுள் இன்னுமொரு விடயமும் பொதிந்திருக்கிறது.பயங்கரமான அவலத்தை எதிர்கொள்ளப்போகும் ஒரு தமிழர் வெளிப்படுத்திய அழிக்க முடியாத எதிர்ப்பே அது.
அந்தக் கவிதை.....

ஜூலை 1983: மேலும் ஒரு சம்பவம்.

இறந்தவர்களைப் புதைப்பது
ஒரு கலையாகவே வளர்ந்திருந்த எமது காலத்தில்
இந்த நிகழ்வு மட்டும் அழிய மறுத்து எஞ்சியிருப்பதற்குக்
காரணம் ஏதுமில்லை
சத்தியமாகச் சொல்கிறேன்
நான் உணர்ச்சிபூர்வமானவன் அல்லன்
சித்தம் குழம்பியவனாகவும் ஒருபோதும் இருந்ததில்லை
உங்களைப் போலவே
நானும் உணர்ச்சிகளை வெளிக்காட்டத் தயங்குபவன்
மேலும் அன்றாட வாழ்க்கையிலும்
நான் ஒரு யதார்த்தவாதி
எச்சரிக்கை உணர்வுள்ளவனும்கூட
மறந்துவிடு என்று அரசு ஆணையிட்டால்
உடனடியாகவே மறந்துவிடுகிறேன்
மறப்பதில் எனக்கிருக்கும் ஆற்றல் பற்றி
எவருக்குமே ஐயமிருந்ததில்லை
என்னை ஒருவரும் குறை சொன்னதும் கிடையாது.

எனினும் அந்தக் கும்பல் அந்தக் காரை
எப்படித் தடுத்து நிறுத்தியது என்பதை
இப்போதும் நான் நினைத்துப் பார்க்கிறேன்
காருக்குள் நாலு பேர்
பெற்றோர் நாலு அல்லது ஐந்து வயதில்
ஆணும் பெண்ணுமாய் இரு குழந்தைகள்
ஏனைய கார்களை எப்படித் தடுத்து நிறுத்தினரோ
அப்படித்தான் இந்தக் காரையும் தடுத்து நிறுத்தினார்கள்
எந்த வேறுபாடும் இல்லை.

குதூகலம் கொப்பளிக்கின்ற மனநிலையில்
ஒரு சில கேள்விகள் செய்வதைப்
பிழையறச் செய்ய விரும்பும் கவனமாய் இருக்கலாம்
பிறகு செயலில் இறங்கினர் வழமைபோல
பெட்ரோல் ஊற்றுவது பற்றவைப்பது போன்ற விடயங்கள்
ஆனால் திடீரென்று யாரோ ஒருவன்
காரின் கதவுகளைத் திறந்தான்
அழுது அடம்பிடித்துப் பெற்றோரைவிட்டு விலக மறுத்த
இரண்டு குழந்தைகளையும் வெளியே இழுத்தெடுத்தான்
குழந்தைகளின் உணர்வுகளைக் கவனத்தில் எடுக்காமல் இருப்பது
சில சமயங்களில் குழந்தைகளுக்கு நல்லது என
அவன் எண்ணியிருக்கக்கூடும்
துரிதமாக இயங்கிய இன்னொருவனோ தீக்குச்சியைக் கிழித்தான்
சூழவர எரிந்துகொண்டிருந்த பலவற்றோடு
இந்த நெருப்பும் சேர்ந்துகொண்டது.

அருகே நின்று தமது சாகசங்களைப் பற்றிப்
பேச ஆரம்பித்தனர் கொஞ்சப் பேர்
கலைந்து போனார்கள் ஒரு சிலர்
காருக்குள் இருந்த இருவரும் என்ன எண்ணியிருப்பார்கள்
என்பதைப் பற்றி யார் கவலைப்பட்டார்கள்
சமாதான விரும்பிகளாக மக்கள்
தமது வீடுகளுக்குத் திரும்ப ஆரம்பித்தனர்.

அப்போதுதான் திடீரென உள்ளேயிருந்தவர்
கார்க் கதவை உடைத்து வெளியே பாய்ந்தார்
சட்டையிலும் தலைமயிரிலும் ஏற்கனவே தீ பற்றிவிட்டிருந்தது
குனிந்தவர் தன் இரண்டு குழந்தைகளையும் வாரி எடுத்தார்
எங்கும் பாராமல் கவனமாகத் திட்டமிட்டு எடுத்த முடிவை
செயல்படுத்துவதுபோல உறுதியுடன் காருக்குள் திரும்பி ஏறினார்
கதவை மூடினார்
தனித்துவமான அந்த ஒலியை நான் கேட்டேன்
எரிந்தழிந்த கார் இப்போதும் தெருவோரம் கிடக்கிறது
ஏனையவற்றோடு இன்னும் சில நாட்களில
மாநகர சபை அதனை அகற்றக்கூடும்
தலைநகரின் தூய்மையே ஆட்சியாளரின் தலையாய பணி.


இந்தக் கவிதையை முதல்முறை வாசித்தபோது என்னுடைய எலும்புகள் உறைந்தன. கவிதையில் இடம்பெற்ற சம்பவங்கள் கற்பனையானவை என நான் நினைக்கவில்லை. கவிதை தருகிற துல்லியமான வர்ணனையும் விவரங்களும் நேரடிச் சாட்சியம் இன்றிச் சாத்தியப்பட்டிருக்காது.நேரில் பார்த்த ஒரு சிங்களவரின் சாட்சியம்.வலியுடன் ஆனால் சிங்களவர் என்ற வகையில் பாதுகாப்பான நிலையிலிருந்து பார்த்த ஒரு நேரடிச் சாட்சியம். இந்தச் சம்பவத்தை பாஸில் ஃபெர்னாண்டோ நேரடியாகப் பார்க்கவில்லை.நேரில் பார்த்தவர் பாஸிலின் நண்பர் ஒருவர்.நாரஹேன்பிட்டியாவில் இருக்கும் தொழில் திணைக்களத்துக்கு அருகே சம்பவம் நடந்தது.வேறு பல வன்முறைச் சம்பவங்களை அந்த வாரம் நேரடியாகப் பார்த்திருந்தமையால் உயிருடன் கொளுத்திய சம்பவங்கள் வெகு சாதாரணமாக இடம்பெற்றன என்கிறார் பாஸில் ஃபெர்னாண்டோ.‘வெகு சாதாரணமாக’ என்பதை அழுத்திச் சொன்னார்."ஏராளமான சம்பவங்களை நான் பார்த்துவிட்டேன்.போலிஸ்காரர்கள் இவற்றைக் கணக்கிலெடுக்கவே இல்லை."

சம்பவங்களைப் பற்றித் திருப்பித் திருப்பிக் கதைப்பதே அந்த நாள்களில் வழமையானதொன்றாக இருந்தது.இந்தச் சம்பவமும் அப்படித்தான் எனக்குச் சொல்லப்பட்டது.எனினும் ஒருவருக்காவது இந்தச் சம்பவம் ஆச்சரியத்தைத் தரவில்லை அவருடைய நண்பர்கள் வட்டத்தில் இத்தகைய சம்பவங்கள் பற்றிக் கோபமும் துயரமும்தான் இருந்தன என்கிறார் பாஸில் ஃபெர்னாண்டோ.

ஆனால் என்னுடைய அக்கறையோ அந்த ஊர் பெயர் தெரியாத தமிழ்த் தந்தை மிகத் தெளிவாக வெளிக்காட்டிய எதிர்ப்பு பற்றியது.முகம் தெரியாத அந்தத் தமிழரின் ஒரு தந்தையின் மிகுந்த உறுதிவாய்ந்த அந்தச் செயல் வார்த்தைகள் பேசுவதைவிடப் பெரிதும் பலமாகப் பேசிற்று.அவருடைய செயலைவிட மிகக் காத்திரமான எந்த அறிக்கையும் வெளிவர முடியாது.அது ஒரு கிளர்ச்சியின் செயல்.வன்மையான கண்டனம்.மானுடத்தின் மீது பொதுவாகவும் சிங்களவர்மீது குறிப்பானதுமான குற்றச்சாட்டு அது என்றும் சொல்கிறார்.

யூலை 1983...

இனப்படுகொலைகளின்போது தப்பிப் பிழைத்தவர்கள் பாதிக்கப்பட்டோர் கொல்லப்பட்டோரை நினைந்து அழுவோர் ஆகியோரின் நினைவுக் கணங்களில் கொலையாளிகள் பற்றிய எண்ணங்களும் தவிர்க்க முடியாமல் பிணைந்திருக்கும்.எல்லாப் படுகொலைக் காலங்களிலும் கொலையாளிகள் எரியூட்டுவோர் கொள்ளையடிப்போர் எனப் பலதரப்பினர் இருக்கத்தான் செய்வர் இவர்கள் வெறுமனே ‘காடையர்கள்; காட்டுமிராண்டிகள்’ அல்லர்.இனப்படுகொலைகளில் ஈடுபட்டோர் பழியை வேறு யாரிடமாவது சுமத்தி விட்டுத் தாம் விலக நினைக்கிற மத்தியதர வர்க்க அறிவுஜீவிகள் அரசாங்கத்தின் அடியாள்களாக இருக்கலாம்.ஜூலை83 இல் இத்தகைய வெற்றிக்களிப்பின் கணங்களில் ஒன்றை உள்ளூர்ப் படப்பிடிப்பாளர் ஒருவர் படம் எடுக்க நேர்ந்தது.ஆடை களையப்பட்டு பீதியுடன் இருக்கும் தமிழர் ஒருவரைச் சூழ நின்று ஆட்டம் போட்டுக்கொண்டிருந்த இளைஞர்களையும் மனிதர்களையும் அந்தப் படம் காட்டியது.அந்தத் தமிழர் கொலை செய்யப்படுவதற்குச் சில கணங்களுக்கு முன்பாக அந்தப் படம் எடுக்கப்பட்டிருக்கிறது.

கொழும்பு நகரில் பொறள்ளை என்னுமிடத்திலிருந்த பஸ் நிலையத்துக்கு அருகே அதிகாலை 1.30 மணியளவில் 24 ஜூலை 1983 திங்கள் கிழமையன்று இந்தச் சம்பவம் நடந்தது. அன்றைய நாளைத்தான் ‘கறுப்புத் திங்கள்’ என்று அழைக்கிறார்கள்.ஜூலை 83இன் முதலாவது படுகொலைகளில் ஒன்றாக இது இருந்திருக்க வேண்டும்.இந்தப் படத்தை எடுத்தவர் சந்திரகுப்த அமரசிங்க.இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியின் ‘அத்த’ என்கிற நாளிதழில் பணியாற்றியவர் அவர்.படத்தில் இருக்கும் தமிழர் கொல்லப்பட்டதை சந்திரகுப்த அமரசிங்க பின்னர் உறுதிப்படுத்தினார்.கேளிக்கை உணர்வுடனேயே கொலையாளிகள் இயங்கியதாகச் சந்திரகுப்த அமரசிங்க தெரிவித்தார்.

இனப்படுகொலைகளின்போது வெளிப்படுத்தப்படும் இத்தகைய குதூகலத்தை ஒட்டுமொத்தமாகவே விசித்திரமான மடத்தனம் என நாம் ஒதுக்கிவிட முடியாது.இன்னொரு சிங்கள நண்பர் சொன்னது இந்தக் கதை.

கண்டி நகரின் பேராதனை வீதிக்கு அண்மையில் ஒரு ‘கௌரவமான’ தெருவில் குடியிருந்தவர் அவர்.ஜூலை 83 படுகொலைகள் கண்டியிலும் பரவலாகவும் கொடூரமாகவும் இடம்பெற்றன.தெருவில் இருந்த தமிழ் வீடுகளைத் தேடிக்கொண்டு ஒரு இளைஞர் கும்பல் அலைந்தது.தமிழ் மூதாட்டி ஒருவர் குடியிருந்த வீட்டை இனங்கண்ட கும்பல் நேரே அங்கு சென்றது. நல்லவேளையாக ஏற்கனவே அந்த மூதாட்டி பாதுகாப்பாகத் தன்னுடைய சிங்கள நண்பர்கள் வீட்டுக்குச் சென்றுவிட்டார்.கும்பல் வீட்டை உடைக்க ஆரம்பித்தது.எனது நண்பரும் கூட்டத்தோடு கூட்டமாக வேடிக்கை பார்ப்பவர்களில் ஒருவராக அங்கே நின்றார். தமிழ் மூதாட்டியின் வளர்ப்புப் பிராணியான அல்சேஷன் நாயைக் கும்பல் கண்டுபிடித்துவிட்டது.அந்த நாய் துண்டு துண்டாக வெட்டப்பட்டது.கும்பலுக்கு மிகுந்த கொண்டாட்டம்.

பயங்கரவாதம் எனும் போர்வையில் நடாத்திய ஒரு இனப்படுகொலையே 1983இல் நடைபெற்ற நாடு தழுவிய இனக்கலவரம்.கேட்டுப் பெற முடியாததை போராடிப் பெற புறப்பட்டவர்களுக்கு ஸ்ரீலங்கா அரசு குத்திய முத்திரைதான் பயங்கரவாதம்.ஆனால் ஸ்ரீலங்கா அரசின் ஏவல்படைகள் ஈழ மண்ணில் செய்த அட்டூழியங்களிற்கு முற்றுப்புள்ளி இல்லை.1956இல் எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டார நாயக்காவின் தனிச் சிங்களச் சட்டம் 1974இல் தமிழாராய்ச்சி மகாநாட்டுப் படுகொலைகள்,1983இல் யாழ் நூலக எரிப்பு என்று வளர்ந்து 1983இல் நாடு தழுவிய இனக்கலவரம் ஸ்ரீலங்கா மூர்க்கத்தனமாக நடாத்தப்பட்டது.

1983 யூலை 23இல் திருநெல்வேலியில் 13 ஸ்ரீலங்கா இராணுவத்தினர் தமிழீழ விடுதலைப் புலிகளினால் கொரில்லாத் தாக்குதல் மூலம் கொல்லப்பட்டனர்.யூலை 24இல் இராணுவத்தினரின் சடலங்கள் கொழும்பில் உள்ள கனத்தை பொது மயானத்தி்கு கொண்டு வரப்படுகிறது.இதன் எதிரொலியாக பொறள்ளையில் ஆரம்பித்த இனக்கலவரம் காட்டுத் தீ போல் தமிழர்கள் வாழும் பகுதிகளுக்குச் சென்றது.தமிழர்களைக் கண்ட இடத்தில் தாக்கினர்.கொள்ளையடித்தனர் கற்பழித்தனர் தீ வைத்தனர்.அன்றைய ஜனாதிபதி ஜயவர்த்தனாவின் ஆதிகாரத்திற்கு அப்பால் நிலைமை கட்டுக்கடங்காது சென்றுவிட்டது. ஏனெனில் அவருடைய அமைச்சர் சிறில் மத்யுவும் இராணுவமுமே இனக் கலவரத்தின் சூத்திரதாரிகள்.ஊரடங்குச் சட்டம் அமுல் நடத்தப்பட்ட போதிலும் வாக்காளர் பட்டியலை வைத்து வீடுகள் தொழிற்சாலைகள் கடையை இனவெறிக் கும்பல் இனங்கண்டது.

கொள்ளுப்பிட்டி பொறள்ள,வெள்ளவத்தை,கொட்டாஞ்சேனை என்று கொழும்பில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் 2000க்கு மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டனர்.ஒரு இலட்சத்திற்கு மேலான தமிழர்கள் வீடிழந்தனர்.தமிழ் தொழிலதிபர்களான குணரத்தினம்,ஞானம் மகாராஜா போன்றவர்களின் ரெக்ஸரைல்ஸ் பிலிம் வினியோகம் போக்குவரத்துச் சாதனங்கள் போன்றவற்றை எரிந்து நாசமாக்கினர்.இதன் மூலம் மாத்திரம் 500 கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டமும் 1 1/2 இலட்சம் பேருக்கு மேல் வேலையும் இழந்தனர்.இவர்களின் புத்தியற்ற வேலையால் சிங்கள மக்களும் வேலையிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.இதைவிட மாத்தளை,நுவரேலியா,அநுராதபுரம்,கண்டி என்று தமிழர் வாழும் பகுதிகளில் எல்லாம் வன்முறைகள் நடந்தேறின.

ஸ்ரீலங்கா அரசின் சித்திரவதைக் கூடங்களை வெலிக்கடை,யாழ்க்கோட்டை ஆனையிறவு, பனாகொடை,குருநகர்,மட்டக்களப்பு என்று வரிசைப்படுத்தலாம்.பின் நாளில் குருநகர் இராணுவ முகாமினை தகர்த்து யாழ்/கோட்டை ஆனையிறவு முகாம்களை தாக்கி கோட்டையை முற்று முழுதாக கைப்பற்றினர்.1984இல் இரண்டு தடவைகள் மட்டக்களப்பு சிறை உடைக்கப்பட்டு பல ஈழப் போராளிகள் மீட்கப்பட்டனர்.பலத்த காவலிற்கு மத்தியிலான பனாகொடை முகாமில் இருந்து மகேஸ்வரன் என்ற போராளி தப்பி பனாகொடை மகேஸ்வரன் என்ற புகழ் பெற்றார்.

ஸ்ரீலங்காவிலுள்ள சிறைச்சாலைகளில் மிகப்பெரியது வெலிக்கடை சிறைச்சாலையாகும். இது ஒரு சிலுவை அமைப்பாக ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது.இங்குள்ள சப்பல் இரண்டு மாடிக் கட்டடத்தில் ஏ 1,பி 2,சி 3,டி 4 என நான்கு பிரிவுகள் கீழ்ப்பகுதியில் அமைந்துள்ளன.1983 யூலை மாதம் சி 3 பிரிவில் பிரிவில் பனாகொடை இராணுவ முகாமில் இருந்து கொண்டு வரப்பட்ட 28 தமிழ் கைதிகளும் பி 2 பகுதியில் 1981 ஏப்பிரல் 5ஆம் திகதி கைது செய்யப்பட்ட குட்டிமணி,தங்கத்துரை உட்பட ஜெகன்,நடேசதாசன்,சிவபாதம் மாஸ்டர், தேவன் உடன் வேறு சில கைதிகளும் தனித்தனியாகப் பூட்டப்பட்டு இருந்தனர்.இந்த ஆண்டு மேல் மாடிகளிலிருந்தும் சுமார் 600 சிங்கள கைதிகள் பலதரப்பட்ட குற்றங்களிற்காக தண்டிக்கப்பட்டு இருந்தனர்.இங்கு இருந்த தமிழ் போராளிகள் பல காரணங்களிகாக கைது செய்யப்பட்டிருந்தனர்.1981 ஏப்ரல் 5ஆம் திகதி தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் தங்கத்துரை குட்டிமணி ஆகியோரும் 22ஆம் திகதி ஜெகனுடன் பல இளைஞர்களும் கைது செய்யப்பட்டு இருந்தனர்.1983ஆம் ஆண்டு பெப்பிரவரி 24ஆம் நாள் தங்கத்துரை நீதிமன்றத்தில் ஆற்றிய உரை பிற்காலத்தில் தமிழீழ விடுதலை இயக்கத்தினரால் "நாம் வன்முறை மீது காதல் கொண்ட மனநோயாளிகளல்ல" என்ற வடிவில் வெளியிடப்பட்டது.அவற்றின் சில பகுதிகள்...

"பயங்கரவாதம் கொள்ளை என்கிறீர்கள்.ஸ்ரீலங்கா அரசின் ஏவல் படைகளினால் நடாத்தி முடிக்கப்பட்ட பயங்கரவாதங்களுக்கு இணையாக பயங்கரவாதங்கள் இத்தீவில் எக்காலத்திலும் நடக்க முடியாது.அதே ஏவல் படைகள் சூறையாடிய தமிழ் மக்களின் சொத்துக்கள் அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டமையும் இத்தீவு அறியாத இரகசியங்கள் அல்ல.இத்தனை கேவலங்களையும் நடாத்தி முடித்திருக்கும் நீங்கள் எம்மை பயங்கரவாதிகளாய் சித்தரிக்க கச்சை கட்டியிருப்பதை விட இந்நூற்றாண்டின் சிறந்த நகைச்சுவை வேறென்ன இருக்க முடியும்."

"பிரிவினை கோருகின்றோம்.நாட்டைத் துண்டாட முயற்சிக்கின்றோம் எனச் சொல்கிறீர்கள் நாம் எப்போது உங்களுடன் சேர்ந்திருந்தோம்?ஆங்கிலேயரால் திருப்பி ஒப்படைக்கவில்லை.எமது பூமி எக்காலத்திலும் எம்மிடம்.யாரிடமும் தாரைவார்க்கவும் இல்லை.இந்நிலையில் தாம் கோருவது விடுதலையேயன்றி துண்டாடல் அல்ல."

"எந்த ஒரு தேசிய இனமும் தனது இறைமையை நிலை நிறுத்துவதிலும் பறிக்கப்பட்டிருப்பின் அதை மீண்டும் பெற்றுக்கொள்ள முயற்சிப்பதையும் தேசத்துரோகமோ அன்றி பயங்கரவாதமோ என உலகில் எந்த ஒரு சாசனமும் கூறிவிடவில்லை."

"இத்தீவில் வனவிலங்குகளிற்கேனும் ஒரு வில்பத்து,யாஎல,சிங்கராயக்காடு என வரையறுக்கப்பட்ட பிரதேசம் உண்டு.ஆனால் தமிழன் தமிழனாக வாழ்வதற்கு பாதுகாக்கப்பட்ட வரையறை உள்ள எதுவும் உங்களினால் இதுவரை வழங்கப்படவில்லை. நீங்களாகவே வழங்கப் போவதுமில்லை."

"நாம் வன்முறை மீது காதல் கொண்டவர்களோ அன்றி அது மாதிரியான நோய்களால் பாதிப்புற்ற மனநோயாளிகளோ அல்லர்.மாறாக விடுதலையை முன் வைத்துப் போராடும் ஓர் ஸ்தாபனத்தில் அங்கம் வகிக்கும் நேர்மையான போராளிகளே நாங்கள்."

"நாம் விடுதலை பெறுவது நிச்சயமான உண்மை.பின்னர் உங்கள் நாட்டின் சட்டப் புத்தகங்களில் நிரந்தர இடம் பெற்றுவிட்ட எச் சட்டங்களும் எம்மை அணுகா.எமது கடமையை முடிந்தவரை செய்த மன நிறைவுடன் எதிர்காலத்தை சிறையில் கழிக்கவோ... வேண்டுமாயின் மரணத்தைக் கூட தழுவவோ நாம் தயங்கவில்லை."

இந்நீதி மன்றத்தில் போராளிகளிற்காக புகழ் பெற்ற சட்டத்தரணிகள் சிவசிதம்பரம்,கரிகாலன் ,சந்தியேந்திரா குமாரலிங்கம் போன்றோர் வாதாடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

1983 ஏப்பிரல் 7ஆம் திகதி உமா மகேஸ்வரன் சந்ததியார் ஆகியோரை சந்தித்ததாகவும், இந்தியாவிற்கு தப்ப வைத்ததற்காகவும் டேவிட் அவர்களையும் அதே குற்றங்களின் சந்தேக நபராக டாக்டர் இராஜசுந்தரம் அவர்களால் ஸ்ரீலங்காவின் இரகசிய பொலிஸ் பிரிவினர் கைது செய்திருந்தனர்.இவர்கள் மூலம் காந்தியம் என்ற அமைப்பு உருவாக்கப் பெற்றது.வவுனியாவில் 12 நவீன பண்ணைகள் நடமாடும் வைத்தியசாலைகள் பெண்களிற்கான பயிற்சி நிலையங்கள் சிறுவர்களிற்கான பால்,திரிபோசா மா விநியோகம் சிறுவர்களுக்கு பாடஞ்சொல்ல ஆசிரியர்கள் ஏறத்தாள 5000 மலையக மக்கள் வவுனியா திருகோணமலை போன்ற தமிழ்ப் பிரதேசங்களின் குடியமர்த்தப்பட்டனர்.இந்த வேலைத்திட்டங்களின் வருடாந்த வரவு செலவுத்திட்டம் 5,000,000 ரூபாய்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

"சுதந்திரன்" ஆசிரியர் கோவை மகேசன்.தமிழீழ அணியின் தலைவர் டாக்டர் எஸ்.ஏ. தர்மலிங்கம் (75 வயது) சாவகச்சேரி பொலிஸ் நிலையத் தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு உதவினார்கள் என்ற குற்றத்திற்காக சந்தேக நபர்களாக 1982ஆம் ஆண்டு நவம்பர் 20ஆம் திகதி விரிவுரையாளர் நித்தியானந்தன்,நிர்மலா நித்தியானந்தன் மற்றும் மதகுருமாரர்கள் சிங்கராயர்,சின்னராயர்,ஜெயகுலராஜாவுடன் மாஸிச எண்ணங்கள் சிந்தனைகள் கொண்டிருந்த பலரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவர்களோடு தமிழீழப் போராட்டத்தில் பங்கெடுக்காமல் துரதிஷ்டவசமாக கைது செய்யப்பட்டவர்கள் பலர்.வெளிநாட்டுப் பயணத்திற்கு 50,000 ரூபா கட்டிய ஜெயதாஸ் ஏஜன்சிக்காரால் தமிழீழப் போராளி என போலீசாருக்கு இணங்காட்டப் பட்டார்.ஐம்பது வயதுடைய பாலசிங்கம் என்பவர் கிணறு வெட்டுவதற்காக வைத்திருந்த டைனமற்றால் கைது செய்யப்பட்டிருந்தார்.வவுனியாவில் நடைபெற்ற இலங்கை விமானப் படையினருக்கு எதிரான தாக்குலின் பின் துவக்கு கடையொன்றினுள் எறியப்பட்டிருந்தது.எந்தத் தொடர்பும் இல்லாத கணேசலிங்கம் (26 வயது) கைது செய்யப்பட்டார்.இவ்வாறு பலருடைய சோகக் கதைகளை வரிசைப்படுத்த முடியும்.

தமது மண்ணின் மைந்தர்கள் ஸ்ரீலங்காவின் சிறைக்கூடங்களில் அரசியல் கைதிகளாக அடைபட்டு அவர்கள் பட்ட இன்னல்கள் சொல்லில் அங்காது.15 நிமிடமே வெளியில் வருவார்கள்.மிகுதி 23 மணி 45 நிமிடங்களும் தொடர்ந்து பல நாட்களாக கையில் விலங்குடன் சாப்பாடு கொடுக்காமல்,பின்பு உப்புக்கூடிய சாப்பாடுகளையும் கொடுப்பார்கள். சிறை வளவில் மழை பெய்து நிற்கும் வெள்ளத்தில் உருளச் செய்வார்கள்.தலைகீழாகக் கட்டித் தொங்விட்டு மிளகாய்த்தூள்புகை போடுவார்கள்.இவையெல்லாம் எந்த ஆடையுமின்றி நிர்வாணமாகவே செய்யச் சொன்னார்கள்.உற்றார் உறவினர் பார்க்க அனுமதிவில்லை.இவை எல்லாவற்றிற்கும் மேலாக 25.07.1983-ல் பிற்பகல் 2.30 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டு நடந்தேறிய இனவெறிக் கொலையே உச்சக்கட்டமானது.

வெலிக்கடையின் சிலுவைக் கட்டடததினுள் பாலித (Location Officer) ஜெஜஸ் (Assistant Cheif Jailer) சமிரத்னா (Jailer) போன்றவர்களின் ஏற்பாட்டின் பெயரில் சிங்களக் கைதிகளை ஆயுதமாக்கி நிராயுதபாணியான தமிழ் கைதிகளின் கதவுப் பூட்டுகள் திறக்கப்பட்டு மண்டைகளைப் பிளந்து,கை கால்கள் வெட்டப்பட்டு,குரல் வளைகள் அறுக்கப்பட்டு, இதயங்களைப் பிளந்து தமிழ் இரத்தம் ஆறாக ஓடியது.இத்தனைக்கும் பாதுகாப்பிற்கு ஸ்ரீலங்காவின் இராணுவம் வெலிக்கடையைச் சுற்றி தமிழ் போராளிகள் தப்பியோடாமல் காவல் புரிந்து கொண்டிருந்தது.எமது மக்களின் குற்றுயிரான உடல்கள் இழுத்து வரப்பட்டு அங்கிருந்த புத்த விகாரையின் முன்பு இருந்த புத்தரின் முன் போடப்பட்டன.சிங்கள கைதிகளின் வழிபாட்டிற்காக புத்தர் சிலையுடன் கூடிய விகாரை ஒன்று அங்கு அமைந்திருந்தது.
Black Moon - the 1983 riots in Sri Lanka
மரண ஓலங்கள் கத்தி கோடாலி கம்பியால் நிரந்தரமாக நிறுத்தப்பட்டன.
மரணதண்டனையென நீதிமன்றத்தில் தீர்ப்புச் சொன்னபோது குட்டிமணியும்,ஜெகனும் தமது கண்களை கண் பார்வையற்ற தமிழர்களிற்கு வழங்குவதன் மூலம் மலரும் தமிழீழத்தை தமது கண்கள் காணட்டும் என்று தமது இலட்சியக் கனவினைச் சொல்லியிருந்தனர்.அந்தோ பரிதாபம்....உயிருடன் அவர்களின் கண்களைத் தோண்டியெடுத்தனர்.நிர்வாணமாக்கி ஆணுறுப்பை வெட்டினர்.இரத்தத்தைக் சுவைத்துப் பார்த்தனர்.

பொன்னாலைப் பாலத்தடியில் வெடிகுண்டு வைத்தது தொடர்பாக கைது செய்யப்பட்ட 16 வயதுடைய சிறுவன் மயில்வாகனம் கைதிகளுக்கு உணவு வழங்கும் இடத்தில் ஒளித்திருப்பதைக் கண்ட ஜெயிலர் சமிரத்னா ரத்தம் பீறிட குரல் வளையைப் பதம் பார்த்தான்.சிங்கள கொலைஞர்கள் "ஜெயவேவா" (மகிழ்ச்சி ஆரவாரம்) என்று விசிலடித்துக் கும்மாளம் கொட்டினர்."நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மனிதர் கண்டு" என்று இந்நேரத்தில் பாரதியை நினைவுகூராமல் இருக்கத்தான் முடியுமா?

புத்தன் சொன்ன போதனை பொய்யாகிப் போகிறது என் மண்ணில்....!
"அஞ்ஞானத்தில் ஆழ்ந்திருப்பவர்களுக்கு ஞானம் வழங்குவதற்காகவே நான் வந்திருக்கிறேன்.உத்தம புருஷனானவன் ஜீவ கோடிகளுக்கு நன்மை புரிவதில் தன்னை இழந்துவிட வேண்டும்.கை விட்டோரை அவன் கைதூக்கிவிட வேண்டும்.இல்லாவிட்டால் அவன் உத்தம புருஷன் ஆகமாட்டான்.ஜீவ காருண்யமே என்னுடைய மதம்.அதனால்தான் இவ்வுலகில் சுகபோகங்களில் வாழ்பவர்களுக்கு அதை அனுஷ்டிப்பது கஷ்டமாக இருக்கின்றது.முக்திக்கான வழி எல்லோர்க்கும் தெரிந்திருக்கின்றது.உயர் குலத்தவனைப் போலவே சண்டாளனும் மூடிவிடுகிறான்.நாணற் குடிசைகளை யானை முறித்து எறிவது போல உங்கள் ஆர்வங்களை ஆசைகளை அழித்து விடுங்கள்.தீமையை அழித்து ஒழிக்கும் அருமருந்தே அறிவாகும்."

கருத்துக்களும் படங்களும் உதவி...இணையம் விக்கிப்பீடியா !

Thursday, July 07, 2011

குழந்தைகள் குழந்தைகளாக.

நேற்று இரவு சிறுவர்களின் சூப்பர் சிங்கர் பார்த்துக்கொண்டிருந்தேன்.அவர்களின் திறன் என்னை மெய்சிலிர்க்க வைத்துக்கொண்டிருந்தது.ஆனாலும் அவர்களை என்ன பாடுபடுத்தி இந்த நிலைக்குக் கொண்டு வந்திருப்பார்கள் பெற்றவர்கள்.சந்தோஷம்தான்.ஆனாலும் பொம்மையும் பந்துமாய் தாங்களே மாறி விளையாடும் இவர்களைப் பொம்மைகளாக்கி சொல்வதைக் கேட்க வைத்திருக்கிறார்கள்.ஆனாலும் அற்புதமான சிற்பிகள் அவர்களது குருமார்கள்.அந்தச் சிந்தனையில்தான் தோன்றிய சில விஷயங்கள் இங்கு படித்த...கேட்ட சிலவற்றோடு.

கற்றல் என்பது வெற்றி பெறுதலாய் மாறிவிட்டது இன்றைய காலகட்டத்தில்.மெல்லக் கல்வி தோற்றுப்போய் வெற்றி மட்டுமே இலக்காகிறது.பண்பு குறித்துப் பேசி வந்த பெற்றோரும் ஆசிரியர்களும் இன்று ஆளுமை குறித்துப் பேசுகின்றனர்.ஆளுமை என்பது வெற்றி பெற்றோருக்கான குறியீடு ஆகும்.கதைகளோ கட்டுக் கதைகளோ நிறையச் சொல்வது வெற்றி பெற்றோரைப் பற்றியேதான்.

"என் அண்ணன் மகன் ஆறு மாதத்தில் குப்புற விழாமலேயே தவழ ஆரம்பிச்சிட்டான்."மிகச் சிறிய பருவத்திலேயே வெற்றி தோல்வி குறித்த பேச்சுகள் தொடங்கி விடுகின்றன.

குழந்தைகளின் வெற்றி தோல்விகளை மதிப்பிடும் எடைக் கற்களாக இரு தடைக் கற்கள் இருக்கின்றன.ஒன்று அறிவின் ஆதிக்கம்,மற்றொன்று பெரியவர்களின் எதிர்பார்ப்பு.

உணர்ச்சிகளையும் இதயங்களையும் அற்பமாய் ஒதுக்கும் அறிவின் குறூரமும், சிறகுகளை அறுத்துச் சுமைகளை ஏற்றும் பெரியோரின் சொந்த ஆசைகளும் சில குழந்தைகளிடம் வெற்றிக் களிப்பையும்,பல குழந்தைகளிடம் விடுபடும் தவிப்பையும் உண்டாக்கி விடுகின்றன.

சரி – பிழை கண்டுபிடிக்கும்வரை அவர்களோடு நாம் பேசிக்கொண்டேயிருக்கவேண்டும்.அபோதுதான் குழந்தைகளை நம்மால் சரியாக விளங்கிக் கொள்ள முடிகிறது..

சுவிஸ் நாட்டு உளவியல் நிபுணர் ஜீன் பியாஜெட் (Jean Piaget 1896-1980) பற்றிக் கல்வியாளர்கள் அடிக்கடி குறிப்பிடுவார்கள்.அவசரம்… வேகம்… முந்துவது போன்ற ரேஸ் மைதானத்து வார்த்தைகள் கல்விக் கூடங்களை வந்து ஆக்கிரமித்தபோது குழந்தை எவ்வாறு சுயமாக படிப்படியாகக் கற்கிறது என்பதை வெற்றிப் பைத்தியங்களுக்கு மண்டையில் அடித்து விளக்கியவர் பியாஜெட்.

பியாஜெட் ஐந்து வயதுச் சிறுமி ஜுலியாவுடன் நடத்திய சிறிய ஓர் உரையாடல் கல்வி உலகின் கவனத்தைப் பற்றிப் பிணித்தது.காற்று உரையாடல் என அது பெயரிட்டு அழைக்கப்படுகிறது.

பியா: காற்று எப்படி வருது ஜுலி?

ஜுலி: மரத்தில இருந்துதான் !

பியா: அது எப்படி உனக்குத் தெரியும்?

ஜுலி: மரம் கிளைகளை ஆட்டி அசைக்கக் காத்து வருதே.நான் பாத்திருக்கிறேன் !

பியா: அப்படியா? எனக்குச் செய்து காட்டு!

ஜுலி: பாருங்க இப்பிடித்தான்! (தன் கைகளை அசைக்கிறாள்)

பியா: காத்து வரலயே!…

ஜுலி: ம்ம்! மரம் பெரிசுதானே! அதுக்கு நிறையப் பெரிய கை இருக்கு.அது அசைச்சா காத்து வந்திடும் !

பியா: அப்போ கடல்ல எப்படி ஜுலி காத்து வருது? அங்க மரங்களே இல்லையே!

ஜுலி: ம்ம்ம்! காத்து தரையில் இருந்து கடலுக்குப் போகுது.இல்ல! இல்ல! அது காத்து இல்ல.அலை !

பியாஜெட் ஆயிரக்கணக்கான குழந்தைகளுடன் உரையாடல் நடத்தியவர்.பெரிய உலக அறிவுச் செய்திகளை அவர் ஒருபோதும் குழந்தைகளோடு பேசும்போது நடுவில் திணித்துச் சொல்வதில்லை.

வயது வந்தவர்களின் அறிவுலகப் பார்வையின் படி ஜுலியர் சொன்னதெல்லாம் தப்பாக இருந்தாலும்,உண்மையில் அது தப்பு அல்ல என்பது பியாஜெட்டின் கருத்து.எதையும் குழந்தை தன் வழியில் அறியும் முயற்சி இது.

ஜுலி சொன்ன காற்றின் நம்பிக்கைக்குத் தலையாட்டி சரி என்று ஒப்புக் கொள்ளாமலும்,தவறு என்று மறுக்காமலும் பியாஜெட் பேச்சைத் தொடர்ந்தார்.குழந்தை தான் கட்டமைக்கும் தர்க்க வழியிலேயே பயணம் செய்து இறுதியில் உண்மையைக் கண்டறிவதுதான் நிலைக்கும்.வயது வந்தோரின் அவசரத்துக்குக் குழந்தையின் புரிதலைத் திருத்துவதும் சரி செய்வதும் தவறு என்பது பியாஜெட்டின் கருத்து.

தோற்கும் பின்தங்கும் தடுமாறும் குழந்தைகளைப் புரிந்து கொள்ள இந்தத் தெளிவும் நிதானமும் தேவை.வயது வந்தோரின் தர்க்க அறிவைக் குழந்தைகளிடம் திணிப்பதன் மூலம் மேலும் மேலும் அக் குழந்தைகளிடம் தோல்வியையே திணிக்கிறோம்.குழந்தைகளைத் தனிமைப்படுத்துகிறோம்.விம்மிக் குறுக வைக்கிறோம்.

குழந்தைகள் எப்படி இருக்கிறார்களோ அப்படியே அவர்களை ஏற்றுக்கொள்வது தான் உண்மையான அன்பு.குழந்தையை உணர்வில்லாப் பொம்மையாக்கி உங்கள் விருப்பத்துக்கு அதை வளைத்து நிமிர்த்த வேண்டும் என்று திட்டமிட்டால் அந்தக் குழந்தை உங்கள் அன்பான குழந்தையாயில்லை !


“குழந்தைகள் உங்களுடன்
இருக்கலாம்;
ஆனால் அவர்கள் உங்களுக்குச்
சொந்தமானவர்கள் அல்ல
அவர்களுக்கு உங்கள் அன்பைக் கொடுங்கள்!
உங்கள் சிந்தனைகளைத்
தர வேண்டாம்
அவர்களுக்கென்று சிந்தனைகள்
இருக்கவே இருக்கின்றன”


இது கலீல் கிப்ரான் பாட்டு.

"இதைச் செய்யாதே என்று குழந்தைகளுக்கு ஆணைகள் பிறப்பிக்காத பள்ளி.பள்ளிக்குப் பொருந்துமாறு குழந்தைகளைத் திருத்துவதற்கு மாறாக குழந்தைகளோடு பொருந்துமாறு தன்னைத் திருத்தித் திருத்தி அமைத்துக் கொண்ட பள்ளி.ஒவ்வொரு குழந்தையும் ஆர்வம் கொண்டு கல்வியைத் தொடரும் வரை காத்திருந்த பள்ளி.எந்தக் குழந்தைக்கும் தோல்வியுணர்வை வழங்காத பள்ளி."

இப்படியொரு பாடசாலை அமைக்க நினைத்துத் தோல்வியுற்ற நீல் என்பவர்.ஸ்காட்லாந்தின் கிராமப்புறப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்தபோது (1917) மாணவர்களுக்கு அதிக சுதந்திரம் கொடுத்தார் என்பதற்காகப் பணி நீக்கம் செய்யப்பட்டவர்.

பணிநீக்கம் செய்யப்பட்டு பள்ளியை விட்டு வெளியேறுகையில் அவர் தன் சின்னஞ்சிறு மாணவர்களுடன் உரையாடுகிறார்:

“நான் ஏன் இந்தப் பள்ளிக்கூடத்தை விட்டுப் போகிறேன் என்பது உங்களுக்குப் புரியுமோ என்னவோ? இருந்தாலும் புரியவைக்க முயற்சி செய்து பார்க்கிறேன்.உங்களுடைய அம்மா அப்பாக்களுக்குப் பிடிக்காததால் நான் வேலைநீக்கம் செய்யப்பட்டேன்.நான் நல்ல ஆசிரியர் இல்லையாம்.உங்களுக்கு நிறைய சுதந்திரம் கொடுத்து விட்டேனாம்.பாடம் சொல்லிக் கொடுப்பதை விட்டு விட்டுப் படம் போடவும் மீன் பிடிக்கவும் விளையாடவும் உங்களைப் பழக்குகிறேனாம்.உங்களுக்குத் தேவையானதைக் கூட நான் சொல்லித் தரவில்லையாம்.

பொலிவியாவின் தலைநகரம் எது என்று உங்களில் யாருக்காவது தெரியுமா?உங்களுக்குத் தெரியாதல்லவா?இதையெல்லாம் நான் சொல்லித் தரவில்லை அல்லவா?…” இவ்வாறு நீல் பேசிக் கொண்டிருக்கையில் ஜிம் என்ற மாணவன் எழுந்து கேட்கிறான் ‘பொலிவியாவின் தலைநகரம் எது சார்?.நீல் பதில் அளிக்கிறார் அது எனக்கே தெரியாது ஜிம்.

பொய்மை கலவாத உரையாடல் இது....
மிக முக்கியமான நிகழ்வொன்று.நிச்சயம் எங்கள் வீடுகளிலும் நடந்திருக்கக்கூடும்.

ஒரு மனநல வைத்தியரும் ஒரு பெற்றோரும் உரையாடும் நிகழ்வு இது !

"நாங்கள் இருவரும் படுக்கையறையில் இருக்கும்போது எங்கள் 5 வயது மகன் எதிர்பாராமல் கதவைத் திறந்து உள்ளே வந்துவிட்டான்.சுதாகரிக்க முடியாமல் சங்கடப்பட்டுக்கொண்டோம்.என் மனைவி என்னோடு நெருக்கமாகப் படுத்திருந்தாள்.வந்தவன் சும்மாவும் இல்லை."அம்மா என்ன செய்றீங்க நீங்க.இறங்குங்க.நான் அப்பா நெஞ்சில படுக்கவேணும் என்றான்."என்ன செய்ய என்றே தெரியவில்லை என்றார்."

இது என்ன பெரிய விஷயம்."இப்போ இடம் இல்லை.அம்மா குண்டா இருக்கிறா.அவவுக்கு மட்டுமே இந்த இடம் இப்போதைக்குப் போதுமாயிருக்கு."என்று நகைச்சுவையாகச் சிரிச்சுக்கொண்டே சொல்லுங்க.இந்த நேரத்தில் பதற்றம் வேண்டாம்.அதுவே "இவர்கள் இருவரும் ஏதோ தப்புச் செய்கிறார்களோ" என்கிற நினைப்பைக் கொண்டுவரும்.

கட்டிப்பிடிச்சுக்கொண்டு இருந்தாலும் பரவாயில்லை டாக்டர்....முழுசா உடலுறவில் இருக்கும்போது படுக்கையறைக்குள் வந்துவிட்டால்......(பகலோ....இரவோ சிலசமயங்களில்.!)

அந்த நேரத்தில் சமாளிப்பது உங்கள் குழந்தையின் வயதைப் பொறுத்தது.பத்து வயதுக்குக் குறைவாக இருந்தால் ஒரு விளையாட்டாக மாற்றுவதும் சண்டை போடுவதாக காட்டிக்கொண்டு அவனின் திசையை மாற்றுவது உங்களின் திறமை.பத்துக்கு மேற்பட்ட வயதானால் சுதந்திரமாகக் கதைக்க நேரம் கொடுங்கள்.அவன் கதைக்க மறுத்தாலோ அவசரமாக வெளியே ஓடிவிட்டாலோ அவன் குழப்பத்தில் இருக்கின்றான் என்று அர்த்தம்.கூப்பிடுங்கள் விடை என்ன என்று உங்களுக்குத் தெரிந்தாலும் ஏன் என்று கேளுங்கள்.அவன் சொல்லும் பதிலில்தான் பயமோ குழப்பமோ தெரிய வரும்.மெல்ல மெல்லப் புரியவைப்பதும் தெளிவு படுத்துவதும் உங்கள் கெட்டித்தனம்.ஆனால் முக்கியம்.

வெளிநாட்டில் செய்த ஆராய்ச்சியில் பல பெற்றோரிடம் "உங்கள் குழந்தைகளுக்கு என்ன பழக்கவழக்கத்தைக் கற்றுத்தர விரும்புகிறீர்கள்" என்று கேட்கப்பட்டது."எங்களின் கூச்சமோ பயமோ அவர்களுக்கு இருக்கக்கூடாது" என்றார்கள்.செக்ஸ் என்பது கெட்ட விஷயம் என்று உங்கள் மனதில் பதிந்து போயிருப்பதால்தான் பதற்றம் அடைகிறீர்கள் நீங்கள்.முதலில் இதை நீங்கள் மாற்றிக்கொள்ளுங்கள் என்கிறார்கள் குழந்தை மனநல வைத்தியர்கள்.

ஒரு ஆங்கிலப் படத்தில் ஒரு குழந்தை இன்னொரு குழந்தையிடம்.....

நீ...எப்பிடிப் பிறந்தாய் ?

ஒரு ஏஞ்சல் என்னைப் பட்டுத்துணியில் சுற்றி ஒரு பறவையில் அலகில் மாட்டிச்சாம்.அந்தப் பறவை என்னை அம்மா மடியில்கொண்டு வந்து போஓட்டிச்சாம் !

அப்பாடி...இவ்ளோ கஷ்டப்பட்டா நீ பிறந்தியா.என்னை அப்பாவும் அம்மாவும் சேர்ந்துதான் பெத்தாங்க !

  © Blogger templates kuzanthainila by kuzhanthainila 2008

Back to TOP