Friday, November 28, 2008

மீண்டும் மகளாகிறாள்(1)

ன் குழந்தைநிலாவில்"மடி கொஞ்சம் தருவாயா"கவிதை பிறந்த கதை
மீண்டும் மகளாகிறாள்.குழந்தைநிலாவில்
"மடி கொஞ்சம் தருவாயா"சந்தேகத்துக்கு உண்டான
கவிதையாயிற்று.அக்கவிதையின் என் நெஞ்சைத் தாக்கிய இன்னும் மறக்கமுடியாத ஒரு சம்பவம்.அந்தக் கவிதைக்குக் கருத்தந்த ஆரம்பகாலக் கதை இது.(எனக்குத் தெரிந்த அமைப்பில் எழுதுகிறேன்.
பிழையிருந்தால் சொல்லித்தாருங்கள்.)
மடி கொஞ்சம் தருவாயா
********************************
மகளே மகளே...என் செல்வமே
கொஞ்சம் நீ...
அருகே வருவாயா
நான் உன் குழந்தையாகி
உன் மடியில் தவழ்ந்திருக்க!


உன்னை நான்
கருச்சுமந்த நாட்களை
கண்ணீர் ஊறிய
கடந்துவிட்ட கனவான நினைவுகளை
தனித்து விடப்பட்ட
வெறுமையான நாட்களை
கதை கதையாய் சொல்லி அழுவேன்
என் தலை தடவி ஆறுதல் தருவாயா!


ஆண்டவன் எல்லாம்
நிறைவாய் தந்திருந்தும்
நீ...உன் தம்பி...உன் அப்பா
என்ற அழகிய கூடு இருந்தும்
எதுவுமே இல்லாமல்
யாருமே இல்லாமல்
உலகத்து உரிமைகள் எல்லாம்
எனக்கு மட்டும்
இல்லையென்றானது போல்
இதயத்தில் இரத்தமொழுக
என்னையே நான் நொந்து வெறுத்த
வேளையைச் சொல்கிறேன் கேட்பாயா!


நம் நாட்டுக் கலவரத்தைக்
காரணம் காட்டி
ஈரேழு வருடங்களுக்கு முன்
உன் அப்பாவை
என் வாழ்க்கையை
ஆர்ப்பரித்த என் ஆசைகளை
எனக்கேயான அந்த இனிய நாட்களை
வீசிய வசந்தத்தை
காலன் கவர்ந்து கொண்டதை
வகை வகையாய் பிரித்து
படம் பார்க்கும் உணர்வோடு காட்டுகிறேன்.
குழந்தை சொல்லும் கதையாக
கொஞ்சம் நீ...கேட்பாயா!



கனவில்தான் காண்கின்றேன்
கண்மணியே உன்னை
கருச்சுமந்து பெற்றெடுத்த
நினைவு மாத்திரமே எனக்குள்.
தாங்கிய வயிற்றைத்
தொட்டுத் தடவிப்பார்த்தே
உண்மையென்று உணர்ந்துகொள்கிறேன்.
பால் குடித்து
என் மடி தவழ்ந்த பருவத்திலே
உன்னை விட்டு வந்தேன்
வெளிநாடு ஒன்று தேடி!



நாட்களோடு நீயும் ஓடி
தாவணிப் பருவம் தாண்டி
இன்று நீ புகுந்த வீடும்

போகத் தயாராகிவிட்டாய்.
நடுக்ககடலின் தத்தளிப்பில்
தாவிப்பிடித்த துடுப்படி நீ எனக்கு.
ஜீவனே...என் உயிரே...என் மகளே
உன் துணையின் கைகளுக்குள்
சொந்தமாகிப் போகுமுன்!


நீ...கொஞ்சம்
உன் மடியைத் தருவாயா
ஒரு குழந்தையாய் உன் மடியில்
நான் அணைந்திருக்க!!!

ஹேமா(சுவிஸ்)
நான் "உப்புமடச் சந்தி"தொடங்கிய காரரணமே கொஞ்சம் கலகலப்பாகக் கொண்டு செல்லலாம் அல்லது செய்யலாம் என்று.அதற்கு முக்கிய காரணம் கடையம் ஆனந்த்.நான் எப்போதும் கவலையாக இருக்கிறேன் என்கிற குற்றச்சாட்டுத்தான்.ஆனாலும் இங்கும் தொடர்கிறது சோகம்.கலகலப்பும் கலந்தே வரும்.

மீண்டும் மகளாகிறாள்(1)
*******************************************

தியமும் இல்லாமல் மாலையும் இல்லாமல்
மத்திமமான நேரம்.வெளியே மழை சிறிதாகத்
தூறல் போட்டு அழ,பூமாதேவி புளுதி வெப்பத்தை அள்ளி வெளிப்படுத்திக் கொண்டிருந்தாள்.ரதியின் கண்கள் அந்த இயற்கையின் விளையாட்டையும் அழகையும் கண்டு ரசித்துக் கொண்டிருந்தாலும் அவள் மனம் மட்டும் அந்த மழைத் தூறல்போல தன் கடந்துபோன நினைவுத் தூறல்களால் நனைந்து கொண்டிருந்தது.அதே நேரம் அவளது மூன்று வயது மகள் ஜீவா கொஞ்சும் மழலைக் குரலால் "அம்மா தம்பி எழும்பிட்டானாம்.கொஞ்சம் பொரிமாவும் தேத்தண்ணியும் வச்சுக்கொண்டு வரட்டாம் அம்மம்மா"என்றபடி அம்மா எனக்கும் தருவீங்களோ என்று அவள் அம்மா சொல்லிவிட்டதையும் சொல்லிவிட்டுத் தனக்கும் தேனீர் தேவை என்பதையும் ஞாபகப்படுத்திவிட்டுப் பூவாகச் சிரித்துத் திரும்புகையில் மீண்டும் தன் கையில் விளையாட்டுப் பொருட்களான
சிரட்டை,தென்னோலை,குரும்பட்டி,ஈர்க்கில் என பொறுக்கி எடுத்தபடி போய்விடுகிறாள்.

அவளின் அம்மாவின் தங்கை அதாவது அவள் சித்தி ரதியின் தங்கை லதா அயலவப் பெண்கள் சிலர் இன்னும் 4-5சிறுவர்கள் கூடிக் களித்து வட்டமேசை மகாநாடு நடத்துமிடம் அந்த வைரவர் கோவிலுக்குப் பின்னால் உள்ள, கிட்டத்தட்ட 60-70 வருடங்களாய் தலை நிமிர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் அந்தப் பெரு விருட்சமான வேம்பு மரத்ததடியின் கீழேதான்.அங்கே தம் தம் வயதிற்கு ஏற்றவர்களோடு அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்கள்.ஆனால் ரதியின் மனம் மட்டும் அவர்களோடு ஒட்டிக் கொள்ளாமல் எதிலும் ஈடுபாடு இல்லாமல் யன்னல் கம்பிகளுக்கூடாக முற்றத்தை வெறித்துப் பார்த்தபடி இருந்தது.

மழையின் தூறல் இப்போ நின்றுவிட்டிருந்தது.தூறல் புழுதியின் வாசனையும் அந்த அடையாளமும் முற்றத்து மண்ணில் ஆங்காங்கே கோலமாய் வரிகள் போட்டிருந்தன.இது ஒரு சாதாரண விஷயமாக இருந்தாலும் மழைத்தூறல் வந்து போன அடையாளாம்போல ரதியின் மன ஓட்டத்திலும் இருந்து கிளறிக் கோலம் போட்டுச் செல்லும் ஞாபகங்களாய் அந்தச் சம்பவம் புழுதியின் வாசனையாய் வரத் தொடங்கியது.நினைவுகள் கிளற கண்களுக்குள் நீர் குளமாகக் கண்ணும் மனமும் நிரம்பத் தொடங்கியது.நினைவுகள் சிலிர்க்க மனம் பேசத்தொடங்கியது.
"நான் திருமணம் ஆனவளா?நான் கணவன் என்கிற ஒருவனோடு கணவன் மனைவி என்கிற உறவோடு வாழ்ந்தவளா?அல்லது ஏதாவது கனவு கண்டு எழும்பியிருக்கிறேனா?ம்ம்ம்...அப்படி நினைத்தாலும்! அப்படியானால் எப்படி ஜீவா,ராஜீவ்!அவர்கள் என் குழந்தைகள்தானே.ஆமாம் அப்போ இது கனவே அல்ல.உண்மையேதான்.எனக்குத் திருமணமாகி ஒரு அன்பான கணவனுடன் வாழ்ந்து இரண்டு குழந்தைகளைப் பெற்றிருக்கிறேன்.என்று தன் இன்றைய நிலைமையை உண்மை என்று தானே ஒப்புக் கொள்கின்றாள்.

அவளிடம் குழந்தையின் பசிக்குப் பொரிமாக் கேட்ட அவளின் அம்மா அவளை ஏதோ இலேசாக அதட்டிக் கோபித்தபடி,ஆனால் அதேநேரம் அவளைப் பார்த்து அவளுக்குத் தெரியாமல் பரிதாபமாய் பெருமூச்சொன்றை விட்டபடி ராஜீவனுக்கு பொரிமாவும் கொஞ்சம் பிசைந்து எடுத்துக்கொண்டு போச்சிப் போத்தலுக்குள் தேநீரும் விட்டுக்கொண்டு அவளின் தனிமையையைக் கலைக்க நினத்தவளாய்
"ஜீவா இங்க உனக்கும் வச்சிருக்கு" என்று பேத்தியைக் கூப்பிட்டு மீண்டுமாய் "ஜீவா... இங்க உனக்கும் இருக்கு.இதிலயே இருந்து சாப்பிட வேணும்.அங்க எடுத்துக் கொண்டு வாரேல்ல.காக்கா கொத்திப்போடும்.
வந்தியோ உதைதான் விழும்.சாப்பிட்ட பிறகு குசினிக் கதவையும் சாத்திப்போட்டு வரவேணும்.கோழி நுழைஞ்சிடும் என்ன"என்று சொல்லிக் கொண்டே மீண்டும் அந்த வேப்பமரத்தடி நோக்கிப் போகிறாள் அவள் அம்மா.ரதியின் விடுபட்ட சிந்தனை மீண்டும் கிடைத்த தனிமையில் பலமாக சுழலத் தொடங்குகிறது.(இன்னும் வருவாள்)

ஹேமா(சுவிஸ்)

Thursday, November 27, 2008

நினைவின் நாள் 2008

ங்கள் வாழ்வே
உங்கள் தியாகங்களில்தான்.
மறவோம்.....
மறவோம் இறக்கும்வரை.
வாழ்த்துவீர் வானகம் இருந்து.
வழி நடத்துவீர் ஈழம் நோக்கி.

ஹேமா(சுவிஸ்)

Monday, November 17, 2008

ஈழம் கண்ட துயரம்(1)

சிங்களப்படை யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றியபோது அங்கேயிருந்த ஐந்து இலட்சம் தமிழ்மக்கள் வெளியேறினார்கள்.உலக வரலாற்றில் இடம் பெற்றுவிட்ட இந்தத் துயர வரலாற்றை விளக்கும் மடல் இது.

யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேறிய ஆடு மாடுகள் போல விரட்டி வந்து மீண்டும் யாழ்ப்பாணத்தில் அடைக்க இப்போ ஒரு இலட்சம் சிங்களப்படை தமிழ்மக்கள் மீது தாக்குதல் தொடுத்திருக்கிறது.

இன்னும் ஆயிரமாண்டுகளுக்குப் பின்னர் எம் மண்ணிலிருந்து
வாழப்போகும்...ஆளப்போகும் இன்றைய தலைமுறைக்கு எம் மண் கொடுத்த விலையிருக்கிறதே...அது பெரிது.எல்லாவற்றையும் எழுத்தில் பொறிக்க முடியாது.வார்த்தைக்குள்ளும் அவை வந்து குந்தாது.

எப்படி எடுத்து விரித்தாலும் அளந்தறியா
"துயர நிலாவரை"
மொழிபெயர்ப்புக் கவிதையைப்போல மூலத்தின் முழுமையும் முகம் காட்டாது.

நாங்கள் சுமந்த துன்பச் சுமையை உங்கள் தோள்கள் அறியாது.அன்று அடித்த எங்கள் இதயத்துடிப்பைக் காடும் கடந்து எவரும் கணக்கெடுக்க முடியாது.கல் அடித்த வேதனை காலுக்குத்தான் தெரியும்.

ஒருநாள் கருத்தரித்த சூரியனை மறைக்க மாரிமழை பெய்யும்.ஐப்பசி மாதம் 30.10.1995 அன்று திங்கட்கிழமைவெய்யோன் படுவான் திசை வாய்க்குள் இரையாகும் வேளை சந்தியா நேரம்...ஐந்து மணி...பேய்கள் வருவதாகப் பேசப்பட்டது.சிங்களப் பிசாசுகள் எம் நிலம் புகுந்து,கோரப்பசிக்குக் குடிசைகள் விழுங்கியபடி. புத்தூர்,சிறுப்பிட்டி,நீர்வேலி,கோப்பாய் என்று விழுங்கியபடி இருபாலைப் பக்கம் எழுவதாய் அறிந்தோம்.பேய்கள் ஏவிய ஏவுகணைகள் ஊருக்குள் உயிர் குடிக்கத் தொடங்கின.நின்று நிதானிக்க நேரமில்லை.அகப்பட்டதை அள்ளிக்கொண்டு ஆண்டாண்டு காலம் பற்றிப்படர்ந்த சொந்தங்களைப் பிரிந்தோம்.ஊர் வெள்ளம்கூடி ஒரு குளத்தில் நிறைவதுபோல "வலிகாமம்"ஓடிவந்து செம்மணியில் திரண்டது.பொழுது புலரத்தொடங்கியதும் முத்திரைச் சந்தைக்கு மூச்சுத் திணறியது.

செம்மணித் தெருவில் எடுத்தகால் வைக்க இடமின்றி நின்றோம்.பின் ஊர்ந்தோம்.இட்டகாலுக்கும் எடுத்தகாலுக்கும் இடையில் இரண்டங்குல வெளியில் நாங்கள் நடந்தோம்.இல்லை...மெல்ல மெல்ல ஊர்ந்தோம்.பத்து மைல் நீளத்திற்குப் பாம்பென நெளிந்தது சனத்திரளின் வரிசை.தரவின் கடலின்மேல் அவலக் குரல் எழுப்பி ஆட்காட்டிகள் எமக்காகக் கத்தின.

மழை மேகம் விழி பனித்துச் சொட்டுச் சொட்டாகத் தோளில் விழுந்தது.நாங்கள் நடந்தோம்.உள்ளே சின்ன உயிர் சுமந்து வயிறூதிய தாயாரும் வரிசையில்!பக்கவாதத்தால் படுக்கையில் கிடந்த நோயாளிச் சீக்காளரும் வரிசையில்!தள்ளாத வயதில் தடுமாறிய மூப்படைந்த பெற்றோர்,முதியோர்,பூப்படைந்த குருதிப் பெருக்குடன் புதிய குமரிகள், கைத்தடியுடன் காலிழந்தோர்,வெள்ளைப் பிரம்புடன் விழியிழந்தோர்,இன்னும் உயிர்காக்கத் துடித்தோர் எல்லாம் அதே வரிசையில் அணிவகுத்திருந்தோம்.கையில் சுமையுடன் தலையில் சுமையுடன் நெஞ்சில் கனத்த துன்பச் சுமையுடனும் நாவற்குழிப் பாலம் ஏறி நகர்ந்தோம்.

கையில் பிடித்து இழுத்து வந்த முதுமைகள் சில
மூச்சைத் துறந்தன.கரையில் கிடத்தி வந்தோம்.மூச்சுத்
திணறிய சின்னப் பூக்கள் சில பேச்சுக் குரல்
அடங்கிப்போயின.தூக்கியபோது பிள்ளையாகவும் கிடத்தினபோது பிணமாகவும் இறக்கினோம்.

உப்பேரிக்குள் ஒரு பாதை உருவாக்கி இறங்கிய சிலர் கழுத்தளவு நீரில் கரைந்தனர்.சிலர் சேற்றில் அமிழ்ந்து போயினர்.பேரும் தெரியாத அந்தப் புதியவரை யாரும் தேடவேயில்லை.தேடும் நிலையிலும் இல்லை.

பத்து மணிக்கு நிலவு பட்டுப்போக எத்தனை இடர்பட்டோம்!எவருக்கும் எவரையும் தெரியவில்லை.ஒரு கைக்கணக்கில் ஊர்ந்தோம்.
கணவனின் கைப்பிடித்து வந்தவள் இன்னொருவரிடம் இடம் மாறிப் போனாள்.பேச்சுக் குரலில் பின்னர்... இனம் கண்டு பெயர் சொல்லிக் கூவிய குரல்கள் நாவற்குழியையே நடுநடுங்க வைத்தன.

பாலுக்கு அழுதன குழந்தைகளின் வாய்கள்.முலையிருந்தும் முடிச்சவிழ்க்க முடியாமல் தனக்குள் அழுதது தாய்மை.பசிக்குதென்று சொல்லிற்று பிள்ளை.பெற்றவள் வயிறு பற்றி எரிந்தது.பேசாமல் வா எனச் சொல்லி நடந்தாள்.தண்ணீர் கேட்டன தளிர்கள்.என்னதான் செய்ய முடியும்...!கடல் நீரையா காட்டலாம்!காதில் ஏறாத பாவனையில் யாரும் வாயே திறக்கவில்லை.பயணம் தொடர்ந்தது.
"ஊரழுத கண்ணீரால் உப்பேரி ஒரு முழம் உயர்ந்தது."

மழை நீரும் விழி நீரும் கலந்து தமிழீழம் நனைந்தது.போய் ஆறும் இடமின்றிப் புறப்பட்டோம்.எங்கு போய்த் தங்குவது...?வழி நெடுக இதுவே கனத்து அழுதியது மனதை.கொட்டும் மழை,குதறும் குளிர்,கும்மிருட்டு.கையில் சுமை...வயிற்றில் பசி..எனினும் நடந்தோம்.வாழ்வுக்கு அதிபதிகள் மூன்று இரவும் இரண்டு பகலும் முடிய வலிகாமம் வழித்துத் துடைக்கப்பட்டது.

அவ்வளவு சனமும் தென்மராட்சியில் அடைக்கலம் பெற்று ஆறியது.எந்தப் பெரிய துயருற்றோம்.எனினும் தளரவில்லை.வந்த வாழ்வு மீண்டும் துளிர்த்தது.கொட்டில்கள் கட்டக் கம்புகள் தேடினோம்.கிடுகு பறித்தோம்.அங்கங்கே முளைத்தன குடிசைகள்.தலை குனிந்து செல்லும் சிறு கொட்டிலானாலும் கால் நீட்டிப் படுக்க நிலமில்லையானாலும் பேயிடம் பிடிபடாதோர் என்கிற பெருமை எம் தலைமுறை கொண்டது.
(துயரம் தொடரும்)

உயிரைப் பிழியும் உண்மைகள் பதிவிலிருந்து.


ஹேமா(சுவிஸ்)

Tuesday, November 11, 2008

பத்திரிகை வாசிப்பின் சுவாரஸ்யம்.

என்ன...புதிய தளம் திரும்பவும் தொடர் விளையாட்டுக்குள் என்று எல்லாரும் யோசிக்கிறது விளங்குது எனக்கு.இது இப்போ பத்திரிகை,புத்தகத் தொடராக இருக்கிறது.ம்ம்ம்...என்ன செய்ய கடையம் ஆனந்த் அவர்களின் திருவிளையாடல் இது.அவரின் 75 ஆவது பதிவில் இப்படி ஒரு விளையாட்டில் என்னை மாட்டி வைக்கவேணும் என்று திருவண்ணாமலை அருணாசலேசுவரருக்கு வேண்டுதலாம்.அதைத்தான் நிறைவேற்றுகிறேன் நான்.இல்லாட்டி சாமி கண்ணைக் குத்தும்.

1)முதன் முதலில் எப்போது பத்திரிக்கையை படிக்க தொடங்கினீர்கள்?

என் அப்பா சினிமா தவிர நிறையப் புத்தகங்கள் பத்திரிகைகள் வாசிக்கும் ஆர்வமுள்வர்.அவர் படித்துவிட்டுப் போடும் புத்தகங்களில் இருந்தே வாசிக்கும் ஆர்வம் தொற்றிக் கொண்டது.அந்த நேரத்தில் அரசியல் தவிர்ந்த சினிமா,
சிறுகதைகள்,வட்டம் வட்டமாய் படம் போட்டபடி இருக்கும் தொடர்கதைகள் வாசிப்பேன்.இதைவிடக் குறுக்கெழுத்துப் போட்டியை நிரப்பாமல் விடமாட்டேன்.அது பெரிய வேலை மாதிரி எனக்கு.எத்தனையோ நாட்கள் கழிவறையில்கூட கூட்டுச்சேர்ந்திருக்கிறது குறுக்கெழுத்துப்போட்டி.

2)அறிமுகமான முதல் புத்தகம்?

முதல் புத்தகம் 3-4 வயதில் அம்புலிமாமா என்றே நினைக்கிறேன்.நீதிக்கதைகள் நிறைந்த புத்தகம்.இப்போ இப்புத்தகம் இருக்கிறதா என்று தெரியவில்லை.இப்புத்தகங்கள் அப்பா சேமித்து வைத்திருந்த புத்தகங்கள்.அப்பாவுக்கு ஒரு சபாஷ்.நன்றியும்கூட.புத்தகம் இல்லாமலே அப்பாவின் நெஞ்சே புத்தகம் ஆகி நிறையப் படித்திருக்கிறேன் அவர் நெஞ்சில் படுத்துக் கொண்டு."பித்தா பிறை சூடி"தேவாரம் அவர் நெஞ்சில் படுத்தபடிதான் பாடமாக்கினேன்.இன்றும் ஞாபகம் இருக்கிறது.

3)பள்ளியில் கதை படித்து மாட்டிய அனுபவம்?

ஓ...அதுவா.பழைய இளமைக்கால ஞாபகங்களைக் கிளறும் கதை இது.கதைப்புத்தகங்கள் படிக்கும் ஆர்வம் வந்த வயதில் பள்ளிப் படிப்பும் கூடுதல் கடுமையாக இருக்கும்.என்றாலும் சிநேகிதிகளின் இரவல் புத்தகங்களை(கூடுதலாக ராணிமுத்து) வாங்கிவந்து குறிப்பிட்ட நாட்களுக்குள் கொடுக்க வேண்டும் என்பதால் எனக்குப் பிடிக்காத ஆங்கிலம்,கணக்குப் பாட நேரம் என் சிநேகிதி கலாவும் நானும் பின் கதிரையில் புத்தகத்துக்குள்ளோ கொப்பிக்குள்ளோ நடுவில் வைத்து வாசிப்போம்.ஒரு முறை ஆங்கில ஆசிரியரிடம் அகப்பட்டு அதிபரின் அறையில் 4 மணித்தியாலங்கள் பார்வைப் பொருளாக இருத்தப்பட்டேன்.அடுத்த முறை அகப்பட்டால் அதிபரின் அறையைச் சுத்தம் செய்ய வேண்டி வரும் என்றும் அச்சுறுத்தி அனுப்பப்பட்டேன்.பின்னொரு முறை கணக்கு டீச்சரிடம் அகப்பட்டு 100 கணக்குகள் கொண்ட சிறிய பயிற்சிப் புத்தகம் முழுதும் செய்து அடுத்த நாள் கொடுத்தேன்.கொடுக்கா விட்டால் அடுத்தநாள் 50 கணக்குகள் கூடிவிடுமே!

இதைவிட வீட்டிலும் காலை 5 மணிக்குப் பிள்ளை படிக்கிறாள் என்று அம்மா எழுப்பிவிட்டால் காலை 5 மணியிலேயே புத்தகத்து நடுவில் கதைப்புத்தகம்.2-3 நாட்கள் மாட்டிக் கொண்டேன்.அம்மாவின் தணடனை வித்தியாசம்.முதலில் நல்ல அடி,திட்டு. தனியாகப் படுக்க வேணும்.விரும்பின சாமான்கள் சீக்கிரம் கிடைக்காது.அப்பாவிடம் சொல்லி,அப்பா என்னோடு பேசமாட்டார்.பிறகு மன்னிப்புக் கேக்க வேணும்.இப்படி நிறைய கதைப்புத்தக அவஸ்தை.

4)நாவல்கள் படிக்கும் பழக்கம் உண்டா?

நிறையவே உண்டு.செங்கை ஆழியான்,மணியன்,ஜெயகாந்தன்,ரமணிசந்திரன் போன்றவர்களின் கதைகள் நிறைய வாசிப்பேன்.எரிக்கப்பட்ட எங்கள் யாழ் நுலகத்தில் இருந்தும் அப்பா நிறையப் புத்தகங்கள் எடுத்துத் தருவார்.
கடல்புறா,பாரீஸுக்குப் போ, பொன்னியின் செல்வன் போன்ற நாவல்கள்,மற்றும் ஈழத்து எழுத்தாளைகளுடைய சின்னச் சின்ன புத்தகங்கள்,அர்த்தமுள்ள இந்துமதம,கவிதைப் புத்தகங்கள் என்று நிறையவே வாசிக்கும் பழக்கமிருந்தது.இப்போ மனதில் குழப்பங்கள் கூடி வாசிக்கும் பழக்கம் குறைவாகவே இருக்கிறது.

சரி...சரி போதும்.நல்ல வேளை சினிமாத் தொடர்போல பெ...ரி...சா இல்ல.அதுவரைக்கும் ஆனந்த்க்கு நன்றி.இனி இந்தத் தொடரைத் தொடர் 2-3 பேரை நானும் இழுக்கத்தானே வேணும்.யார்...அது?

1)விக்கி
2)அப்புச்சி(இவரின் பதிவு நம்பிக்கையில்லை)
3)திலீபன்-உண்மைத்தமிழன்
4)உருப்பட்டாத(வன்)து அணிமா
5)விஷ்ணு

ஹேமா(சுவிஸ்)

Thursday, November 06, 2008

என் புதிய வலைப்பூவைத் தொடக்கிய சினிமாத் தொடர்...

கவிதைகளாலேயே என் உணர்வுகளைக் கொட்டித் தீர்த்த என்னை சினிமாத் தொடரில் இழுத்த றக்குவானை நிர்ஷன்,விக்கினேஸ்வரன்(வாழ்க்கைப் பயணம்),மற்றும் தமிழ்பறவை அண்ணா அவர்களுக்கும் என் எரிச்சல் கலந்த நன்றி.பார்த்தவுடன் முதலில் கேள்விகள் சீ...சினிமாவா என்று அலுக்க வைத்தது.
வேலைப்பளு...ஆரவாரமான பெரிய விடுமுறை.நேரம் பொன்னாக இருந்தது.விடுமுறையால் வர வீட்டில் விருந்தினர்.எப்படிக் கணணியில் ...?

நாட்டில் நிலைமை செய்திகளும் மன அலுப்பைத் தர மனம் ஈடுபாடு அற்று.இதோடு என் ஊர் சந்தியின் ஞாபகத்தோடு ஒரு புதிய வலைப்பூ ஒன்று தொடங்கலாம் என்றிருந்தேன்.அதைச் சினிமாத் தொடரோடு தொடங்க யோசித்தே இத்தனை பெரிய நேர இடைவெளி.
இனி...என் உப்புமடச் சந்தியில் பலதையும் பத்தையும் அலசலாம் வாங்கோ.

1)எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்?

ம்ம்ம்...வயது சரியாக ஞாபகம் இல்லை இருந்தாலும் சினிமாவின் பெயர் ஞாபகமிருக்கிறது.நிறம் மாறாத பூக்கள்.யாழ்ப்பாணத் திரை அரங்கில் திரையிடப்பட்டது.திரைஅரங்கின் பெயரும் ஞாபகம் இல்லை,ஆனால் ஒன்று மாத்திரம் ஞாபகம்.படத்தில் சிங்கம்,புலி,கரடி எல்லாம் வரும் என்றுதான் என்னைப் பெற்றோர் கூட்டிச் சென்றார்கள்.சொன்னபடி எதுவும் வரவில்லை.எனது வீறிட்ட அழுகை.ஒரு முறை கிள்ளிப் பார்த்தார்கள்.முடியவில்லை.படம் முடிவதற்கு முன்பே வீடு திரும்பியாச்சு.

2)நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா?

அது 80 பது களின் பிற்பகுதிக் கோவில் வீதி,வாசிகசாலை,பள்ளிக்கூட சந்தி,விளையாட்டு மைதானம்,புறம்போக்கு காணி இவை எல்லாம் சினிமாக் கொட்டகை ஆன காலம்.அப்போது தான் நினைவு தெரிந்த சில சினிமாக்கள் பார்க்க முடிந்தது.எங்கள் வாழ்வில் அது"ஒரு கனாக் காலம்".இது ஒரு பட டைட்டிலாக இருந்தாலும் அது தான் உண்மை.அப்போது பார்த்த ஊமை விழிகள்,கண் சிவந்தால் மண் சிவக்கும்,வீரபாண்டிய கட்ட பொம்மன்,பாலம்
(சரி என நினைக்கிறேன்),ஹொனஸ்ட் நெட் போன்றபடங்கள் நினைவு தெரிந்து கண்ட முதல் சினிமாக்கள்.

3)என்ன உணர்ந்தீர்கள்?

அந்த வயதில் எதனையும் பெரிதாக உணர்ந்ததாக தெரியவில்லை ஆனால் இப்பொழுது நினைக்கும் போது எதனையோ உணர்ந்தது போல் இருக்கிறது.நிறையத் தவற விட்டது போலவும் இருக்கிறது.

4)கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

குருவி.அதற்காக விஜய் இரசிகை அல்ல சகோதரர் கேட்டதற்காக சுவிஸ் கூர் சினிமா அரங்கு சென்றேன்.படம் முடியும் வரை அண்ணன் ஒரு கோயில் என்பதற்காக என்ன கொடுமை சார் இது என்று நொந்தபடி பார்த்தேன்

5)கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது,எங்கே,என்ன உணர்ந்தீர்கள்?

இரண்டாம் தடவையாக கணணியில்"மொழி".உணர்ந்தது உணர்வுகளை பரிமாற மொழி தேவை.ஆனால் அன்பு என்பது உணர்வாக இருந்தாலும் அதற்கு மொழி தேவையில்லை என்பது.

6)மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?

சிலநேரங்களில் சிலமனிதர்கள்,வீடு,முள்ளும் மலரும்,சிப்பிக்குள் முத்து,
குருதிப் புனல்,மஹாநதி,சேது,ஆட்டோகிராவ்,காக்க காக்க,நந்தா,பிதாமகன்,
வெயில்,கற்றது தமிழ்,அன்பே சிவம்,பருத்தி வீரன் இப்படி பல இதனை விட செருப்பு,பீ போன்ற குறும்படங்கள்.

7)உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?

ஈழத்தவருக்கான கை கோர்த்திருக்கும் தமிழ் சினிமா உலகத்தவரின் போராட்டம்.
காப்டன் அடக்கி வாசிப்பது.

8)உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?

லைட்டிங்,கிராபிக்ஸ்,குசேலன் படத்தில் இறுதிக் காட்சியின் போதான லைட்டிங்,செல்வராகவன் படத்தில்(காதல் கொண்டேன்)லைட்டிங்,சங்கர் படத்தில் வரும் கிராபிக்ஸ்.எல்லாவற்றையும் விட கற்றது தமிழ் படத்தில் ஸ்ரில் லைட்டிங்.கமல் படங்களில் ஒப்பனைக்கலை.

9)தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

எப்போதாவது இன்டர்னெட்டில் வெள்ளாடு புல் மேய்வது போல.
சில நேரம் சலனம் சினிமா இதழ்.

10)தமிழ்ச்சினிமா இசை?

அப்பாடா...பின்னுறாங்கள்.ஒரு முறை புகையிரத நிலையம் அருகில் செவ்விந்தியர் மியூசிக் கேட்டேன் வசீகரா அப்படியே தெரிந்தது.வெளி நாட்டு வாழ்வு பல சந்தர்ப்பங்களை ஏற்படுத்தியுள்ளது.என்றுமே ராஜா ராஜா தான்.சில நேரங்களில் ஏ.ஆர்.ரஹ்மானின் வெள்ளைப் பூக்கள் அமைதிக்காக... தீயில் விழுந்த தேனா...பூங்காற்றிலே உன் சுவாசத்தைக் கேட்பதுண்டு.ஆனால் என்றுமே இசை ஞானி ராசைய்யா தான்.

11)தமிழ் தவிர வேறு இந்திய,உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா?
அதிகம் தாக்கிய படங்கள்?

பெரிதாகப் பார்ப்பதில்லை.ஆனால் சில படங்கள் பார்த்துள்ளேன்.
லகான்,வோட்டர்,சலாம் பொம்பே,அடூர் கோபால கிருஷ்ணன் படங்கள்.ஆங்கிலப் படமான குழந்தைப் போராளிகளை மையமாக வைத்து எடுக்கப்பட பிளட் டைமண்ட்.விடு முறையில் இலண்டன் சென்றபோது வாட்டர்லூ சினிமாவில் பார்த்த சிங்கள திரைப்படமான புரஹிந்த கழுவற
(ஒரு பெளர்ணமி இரவில்)போன்றவை குறிப்பிடத் தக்கவை.

12)தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா?
தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

அப்படி எதுவும் இல்லை.

13)தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

எதிர்காலம் தொழிநுட்பத்தில் சிறப்பாக இருக்கும் என நம்புகிறேன்.இயக்குனர் இடை வெளி என்பது குறைந்துள்ளது.புதிய சிந்தனைகளுடன் பல இயக்குனர்கள் களம் இறங்குகிறார்கள்.புதிய பல சிந்தனைகள் திரையில் வருகின்றன.ஆனால் ஒரு உதாரணம் சேரனின் ஆட்டோகிராவ்வின் கதாநாயகனை ஒரு பெண்ணாகச் சேரனால் காட்ட முடியாமல் போனது.இன்னும் தமிழ் சினிமா சரியான முறையில் தடம் பதிக்கவில்லை என்பதையே காட்டுகிறது.

14)அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

சினிமா இல்லாத உலகத்தில் உலகம் பல சகாப்தங்களாக சந்தோசமாகவே இயங்கி வந்துள்ளது.கவலைப் பட பெரிதாக எதுவும் இல்லை.சினிமாவை ஏதாவதொன்று நிரப்பும்.அது தானே உலக நியதி.


இந்தச் சங்கிலித் தொடரைத் தொடர
திலீபனையும்,
ஈழத்துக் களத்துமேடு ஈழவனையும்,

மெல்போர்ன் கமலையும்,
நேரம் கிடைத்தால் நிலாமுகிலனையும் கூப்பிடுகிறேன்.

ஹேமா(சுவிஸ்)

  © Blogger templates kuzanthainila by kuzhanthainila 2008

Back to TOP